Jun 16, 2021

எழுத்தாளர் கவிவாணன்

தொகுப்பு : கு.ஹேமலதா

            ஆண்-பெண் சமத்துவத்தையும், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வாழ்க்கை போராட்டத்தையும், உறவுகளின் மேன்மையையும் தனது கவிதைகள் வழி உணர்வு நயம்பட பதிவு செய்யும் கவிஞர் கவிவாணன் அவர்கள் 27.7.1971 ஆம் ஆண்டு மதுரையில் மு.அப்துல் ரகீம் - அ. அசரப்புன்னிசா அவர்களுக்கு மகனாக பிறந்தார்.

            அ.முகமது மைதீன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் கவிவாணன் இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்று, தற்போது திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் தபால் துறையில் பணிபுரிகிறார். மனைவி மு. முபாரக் பேகம், ஒரு மகள் மு.மு.ஆதிலா.

            பள்ளிப் பருவத்திலேயே, தன்னுடைய தமிழாசிரியர்  திருமலை வேலவன் அவர்களிடம் இருந்து தமிழார்வமும், அவரின் பகுத்தறிவு மற்றும் முற்போக்கு சிந்தனை கொண்ட கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்டு, பெரியார், அம்பேத்கார், மார்க்ஸ் போன்றோரின் தத்துவங்களை பாடங்களுக்கு அப்பாற்பட்டு அறிந்து கொண்டார். கவிதை குறித்த அறிமுகமும் அங்கிருந்தே துவங்கியது.

            தனது பத்தாம் வகுப்பு தமிழாசிரியர் லோகநாதன் அவர்களிடம் இருந்து புதுக்கவிதை எழுதுவது எப்படி, அதன் வடிவம் பற்றிய புரிதல்களை கற்றது மட்டுமின்றி அவருடைய உந்துதலில் புதுக்கவிதை எழுதவும் ஆரம்பித்தார். ஆசிரியர்களின் வழிகாட்டலோடு, அவரது  பெற்றோரின் வாசிப்பு ஆர்வமும் இவரது வாசிப்புக்கு தூண்டுகோலாக  அமைந்தது. பெற்றோரின் ஆலோசனையின் பெயரில் சிறுவயதிலேயே நூலக உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்.

            பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி சென்று படிக்க விரும்பிய அவரின் ஆசை குடும்ப சூழல் காரணமாக கைவிடப்பட்டு பணியில் சேரும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார்.

            தபால் துறையில் தற்காலிகப் பணியாளராக பணிபுரிந்து கொண்டே பட்டிமன்ற பேச்சாளராக தன்னை  பரிணமித்து கொண்டிருந்த வேளையில் புலவர் பழனி எழில்மாறன், கவிஞர் வெண்மணி, கவிஞர் முல்லை நடவரசு போன்றவர்களின் அறிமுகம் இலக்கியத்தின் மீதான அவரது ஈடுபாட்டை மேலும் வலுவாக்கியது. புதுக்கவிதைகள், மரபுக் கவிதைகள் பற்றிய முழு புரிதல் இவர்களிடம் இருந்தே பெற்றுள்ளார்.

            தோழர் இதயகீதன் அவர்களால் நடத்தப்பட்ட  'அக்கினிக்குஞ்சு' இதழில் கவிஞர் கவிவாணன் அவர்களின் முதல் கவிதை பிரசுரமானது. அதைத் தொடர்ந்து இவரது  படைப்புகள் செம்மலர், வண்ணக்கதிர், கணையாழி, குமுதம், அக்கினிகுஞ்சு போன்ற பல இதழ்களில் வெளிவந்துள்ளன. தொடர்ந்து பல இணைய இதழ்களிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

            கவிக்கோ அப்துல் ரகுமானின் ஹைக்கூ கவிதைகளில் ஈர்க்கப்பட்டும், தோழர் மு.முருகேஷ் அவர்களுடன் நெருங்கிய நட்பில் இருந்ததாலும் ஹைக்கூ கவிதைகள் மீதான அறிமுகமும், ஆர்வமும் கவிவாணன் அவர்களை ஒரு ஹைக்கூ கவிஞராக இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்துவைத்தது. அவரது முதல் ஹைக்கூ படைப்பான 'மின்னல் சிறகுகள்' தொகுப்பு 1997 இல் வெளிவந்தது. 2005 ஆம் ஆண்டு பல ஹைக்கூ கவிஞர்களை ஒன்றிணைத்து அவர் வெளியிட்ட 'சிறகுகளின் காலம்' என்ற ஹைக்கூ அந்தாதி தொகுப்பே தமிழில் வந்த முதல் ஹைக்கூ அந்தாதி என்பது குறிப்பிடத்தக்கது.

            கவிஞராக மட்டுமே அறியப்பட்ட  கவிவாணன் அவர்கள், ஒரு சிறுகதை எழுத்தாளராக  தன்னை வெளிப்படுத்தத் தொடங்கினார். கவிஞர் மு.மேத்தா அவர்களின் உறுதுணையால் அவர் வெளியிட்ட  முதல் சிறுகதை தொகுப்பு 'புதிர்வினை' 2020ஆம் ஆண்டு  வெளிவந்தது. மனித வாழ்வியலில் கதைகளின் முக்கியத்துவத்தையும், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை சூழலையும்  மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது இத்தொகுப்பு.

            கவிஞர், சிறுகதை எழுத்தாளர், பட்டிமன்ற பேச்சாளர் என்ற நிலைகளை அடுத்து பத்திரிக்கை ஆசிரியர், பதிப்பாசிரியர் என்ற முகமும் அவருக்கு உண்டு. கவிஞர் இலமு, தோழர்கள் சாந்தகுமார், வசந்தமுகில் ஆகியோருடன் இணைந்து சுவடு என்ற சிற்றிதழை எட்டு ஆண்டுகள் நடத்தியுள்ளார். 2005 இல் அவ்விதழில் இடம்பெற்ற கவிஞர் மு.மேத்தா அவர்களின் ஹைக்கூ பற்றிய நேர்காணல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கி சுவடு இதழுக்கு ஒரு அறிமுகத்தை கொடுத்தது. பல எழுத்தாளர்களின் நேர்காணல்கள், கவிதைகள் கொண்ட இதழாக சுவடு சிற்றிதழ் அமைந்தது. தடம் என்ற பதிப்பகத்தையும் ஆரம்பித்து ஐந்து நூல்கள் வெளியிட்டுள்ளார்.

            தனது எழுத்து வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்த சிறுகதை எழுத்தாளர் வதிலை சௌந்தர் அவர்கள் நடத்திய 'சுப்ரமணிய சிவா' என்ற சிற்றிதழில் ஐந்து வருடங்கள் துணையாசிரியராக பணியாற்றியுள்ளார்.

            1989 இல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட கவிஞர் கவிவாணன், திண்டுக்கல் மாவட்ட குழு உறுப்பினர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர், மாவட்ட துணைச் செயலாளர் போன்ற பொறுப்புகளிலும், வத்தலகுண்டு கிளைச் செயலாளராகவும் பணியாற்றி, தற்போது திண்டுக்கல் மாவட்டத் தலைவர் பொறுப்பில் உள்ளார்.

வெளிவந்துள்ள நூல்கள்

கவிதை தொகுப்புகள்

1.மின்னல் சிறகுகள் (1997)

2.நிலவில் நனைந்து (2003)

3.சிறகுகளின் காலம் (2005)

4.அனிச்சங்கள் கிளைத்த கொடி (2008)

5.விரியும் உலகு (2012)

6.சிறகு முளைத்த பூக்கள் - ஹைக்கூ கவிதைகள் (2013)

7.றெக்கை கட்டிய வானவில் (2016)

8.கடவுளைப் பிரசவித்த பறவை (2017)

சிறுகதை தொகுப்பு

1.புதிர்வினை (2020)

பெற்ற விருதுகள்

1.தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை விருது

இணைய இணைப்புகள்