Jul 1, 2021

எழுத்தாளர் கோ.திலகவதி

 தொகுப்பு : பா.யுவராஜ்

            எழுத்திலும், பணியிலும் பெண்களுக்கு முன்னுதாரணமாகச் செயல்படும் எழுத்தாளர் கோ.திலகவதி அவர்கள் தர்மபுரி மாவட்டத்திலுள்ள குமாரசாமிபேட்டையில் கோவிந்தசாமி தம்பதியினருக்கு 1951ஆம் ஆண்டு ஒரே மகளாகப் பிறந்தார். இவரது பிள்ளைகள் ஜாய்ஸ் ரேகா, பிரபு திலக் மற்றும் திவ்யா. தற்போது இவர் சென்னையில் வசிக்கிறார்.

            பள்ளிப்படிப்பை தர்மபுரியில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நிறைவு செய்து, வேலூர் ஆக்சிலியம் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

            இவரது அப்பா முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ வீரர் ஆவார். அம்மா ஆசிரியராகப் பணியாற்றியவர். எழுத்தாளர் திலகவதி அவர்கள் பத்து வயதிலேயே கவிதைகள் கட்டுரைகள் எழுத ஆரம்பித்துள்ளார். அதற்குத் தூண்டுகோலாக இருந்தவர் ஆசிரியர் திரு ரங்கசாமி நயனார் அவர்கள் ஆவார். இவரது ஆசிரியர் எழுதிய கவிதைக்கு இவரே முதல் வாசகியாகவும், விமர்சகராகவும் இருந்துள்ளார். இளம் வயதிலேயே பாரதிதாசன் மற்றும் பாரதியாரின் பாடல்கள் இவரை மிகவும் ஈர்த்துள்ளது.

            பெற்றோர் கற்றுக்கொடுத்த சுயமரியாதைக்கொள்கைகள் அவருக்கு நம் காலில் நாம் நிற்க வேண்டும்எனும் ஊக்கத்தை தந்துள்ளது. தந்தை பெரியாரின் பகுத்தறிவுக்கொள்கையை பின்பற்றிய தாயையும், காலையில் கட்டாயம் கந்த சஷ்டி கவசம் படித்தே ஆக வேண்டும் எனும் ஆன்மீகவாதியான தந்தையும் இணைக்கும் கோடாக இருந்ததே பின்னாளில் இவரை சிறந்த முற்போக்குச் சிந்தனையாளராக உருவாக்கியுள்ளது.

            வேலையில்லாத்திண்டாட்டத்திற்கு மத்தியில் பணம் தந்து வேலை பெற இயலாத நிதிநிலை பற்றாக்குறை மற்றும் மனநிலை தளர்வுற்ற காலத்திலும் சிவில் தேர்வுகள் எழுதி தபால்காரருக்காக காத்திருப்பதே ஒரு துயர காவியம்என்று சொல்லும் அளவிற்கு இருந்த சூழ்நிலையில் இறுதியாக 1976 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்ச்சி பெற்றார்.

            1976 ஆம் ஆண்டில் தமிழக காவல் துறையில் பணியில் சேர்ந்த இவர் 34 ஆண்டுகள் அத்துறையில் பல்வேறு பிரிவுகளில் பல உயர் பதவிகளை வகித்துள்ளார் மேலும் காவல்துறை தலைமை இயக்குனர் பதவியை அடைந்த முதல் தமிழ்ப்பெண் கோ.திலகவதி ஆவார். தமிழகத்தில் இப்பதவியை அடைந்த இரண்டாவது பெண் இவராவார். தமிழ்நாட்டின் உச்சகட்ட பொறுப்புகளில் பணியாற்றியதோடு பல முதலமைச்சர்களிடமும் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு.

            1982 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் திரு.எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களின் உத்தரவின்படி வேலூர் காவலர் பயிற்சி பள்ளி முதல்வராக நியமிக்கப்பட்டு 660 பெண் காவலர்களுக்கு தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக பயிற்சி அளித்துள்ளார். தமிழக காவல்துறையில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்ததோடு ஒரு பெண்ணாக பல சவால்களை நேருக்கு நேரில் சந்தித்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். காவல் பணியில் பல சாதனைகளை செய்து 31. 3.2011 அன்று அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

            பள்ளிப்படிப்பில் ஆரம்பித்த இலக்கிய ஆர்வம் காவல்துறை பணியிலும் அறுபடாத இழை போல தொடரப்பட்டு முழுநேர இலக்கியவாதியாக வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கி 300 சிறுகதைகள், 20 குறுநாவல்கள்,7 நாவல்கள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகளை தமிழ் மக்களுக்காகத் தந்துள்ளார். இவரது முதல் வெளியீடாக வந்த கவிதைத்தொகுப்பு அலை புரளும் கரையோரம் என்பதாகும். 1987 இல் அவரது முதல் சிறுகதை தினகரன் பத்திரிக்கையில் வெளிவந்தது, அதைத் தொடர்ந்து அவரது சிறுகதைகளின் தொகுப்பை தேயுமோ சூரியன் என்ற தலைப்பில் பின்பு வெளியிட்டனர்.  தேயுமோ சூரியன் மற்றும் அரசிகள் அழுவதில்லைஆகிய சிறுகதைத் தொகுப்புக்கு தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது கிடைத்துள்ளது. 1993 இல் வெளியான பத்தினிப் பெண் எனும் நாவல் தமிழில் சினிமா படமாக வெளிவந்துள்ளத. 2005 ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது கல் மரம் என்ற நாவலுக்காக கிடைத்துள்ளது.

                        தனது பணியின் போது தான் கண்ட தமிழகத்தின் அறியப்படாத பல எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், பேச்சாளர்கள் ஆகியோர் அனைவரையும் மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பது இவருடைய ஆதங்கமாகும். தான் துவங்கிய அமிர்தாஎனும் மாதப்பத்திரிகையில் புதிய எழுத்தாளர்களுக்கும், இளைஞர்களுக்கும் வாய்ப்பு தர தொடங்கினார். பின் அம்ருதா பதிப்பகம்” “அக்ஷர பதிப்பகம் என்று விரிவடைந்து அதன் மூலம் 500 க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளனர். இதில் முக்கியமானது முத்துகள் பத்துஎனும் புத்தக வரிசையாகும். இது புகழ்பெற்ற மற்றும் புகழ் பெறாத எழுத்தாளர்களின் பத்து கதைகள் கொண்ட தனிட்தனி தொகுப்புகளாக வெளிவந்தது. இப்புத்தகம் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. அனைத்து பள்ளியிலும் நல்ல நூலகமும் அதை சரியாக பயன்படுத்தவும் வேண்டும் என்பதோடு இளம் வயதிலேயே மாணவர்கள் பாடப்புத்தகங்களுக்கு மத்தியில் நல்ல நூல்களின் மூலம் பரந்த ஆறிவு பெற வேண்டும் மேலும் வாசிப்பது ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் பழக்கமாக மட்டுமின்றி விருப்பமாக வேண்டும் என்பது இவரது விருப்பமாகும்.

வெளிவந்துள்ள நூல்கள்

கவிதைத்தொகுப்பு

அலைபுரளும் கரையோரம்

சிறுகதைத் தொகுப்பு

1)       தேயுமோ சூரியன்

2)       அரசிகள் அழுவதில்லை

3)       பொழுதெப்போ விடியும்

4)       நாற்காலியும் நான்கு தலைமுறைகளும்

5)       கடற்கரைக்குப்போகும் பாதை

6)       சக்கரவியூகம்

7)       வெளிச்சத்திற்கு வராத டைரி

8)       கைக்குள் வானம்

9)       பட்டாபி கதைகள்

       முத்துக்கள் பத்து

குறுநாவல்கள் மற்றும் நாவல்கள்

1)       சொப்பன பூமியில்

2)       வானத்துக்கு வரம்பில்லை

3)       பத்தினிப்பெண்

4)       நேசத்துணை

5)       வார்த்தை தவறிவிட்டாய்

6)       ஒர் ஆத்மாவின் டைரி

7)       கனவைச்சூடிய நட்சத்திரம்

8)       கங்கை வந்து நீராட்டும்

9)       மின்னல் பூக்கள்

10)   உனக்காகவா நான்

11)   கல்மரம்

12)   தமிழ்க்கொடியின் காதல்

13)   வேர்கள் விழுதுகள்

14)   செராமிக் சிற்பங்கள்

15)   நிலவுக்குள் சூரியன்

16)   வாழ்க்கையே காட்சிகளாய்

17)   நெஞ்சில் ஆசை

கட்டுரைகள்

1)       மானுட மகத்துவங்கள்

2)       கோபம் கோபமேலாண்மை

3)       முடிவெடு

4)       என்னைக்கவர்ந்த நூல்கள்

5)       சினிமாவுக்குச்சில கேள்விகள்

6)       காலந்தோறும் அறம்

7)       உங்களுக்காக உலக சினிமா

வாழ்க்கை வரலாறு

சேகுவேரா

மொழிபெயர்ப்புகள்

1)       கோவர்த்தன்ராம்

2)       நிழல் கோடுகள்

3)       சாகித்திய அகாதெமிக்காக மொழிபெயர்த்த பிறமொழி சிறுகதைகள்

4)       கலில் கிப்ரான் - வாழ்வும் இலக்கியமும்

5)       நல்லிசைப்புலவர் மெல்லியலார்

6)       உதிரும் இலைகளின் ஓசை

7)       கடைத்தெருவின் ஞானி

8)       எட்டுத்திக்கிலிருந்து ஏழு கதைகள்

9)       அபராஜிதோ

10)   மூங்கில் திரை

11)   மரப்பாலம்

12)   சிதைந்த கூடு

13)   அன்புள்ள பிலாத்துவுக்கு

14)   நெருப்பு நிலா

15)   பிறவாத குழந்தைக்கு ஒரு கடிதம்

16)   சல்வடார்டாலி

17)   தீப்பறவையின் கூடு

18)   என் தலைமாட்டில்

தொகுத்த நூல்கள்

1)       கோடை உமிழும் குரல்

2)       காலத்தின் கண்ணாடி

3)       அறிஞர் அண்ணா சிறுகதைகள்

4)       தினம் ஒரு திருமுறை

5)       தினம் ஒரு திருமந்திரம்

6)       தொப்பிள் கொடி

7)       பெரியபுராணத்துள் ஒரு விண்பயணம்

பெற்ற பரிசுகள், விருதுகள்

1)       கல்மரம்' நாவலுக்காக 2005 ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருது

2)       தமிழ்நாடு அரசின் சிறந்த சிறுகதை எழுத்தாளர் பரிசு -1987

3)       தமிழ்நாடு அரசின் சிறந்த சிறுகதை எழுத்தாளர் பரிசு -1988

4)       தமிழ்நாடு அரசு வழங்கிய சிறந்த சிறுகதை எழுத்தாளர் விருது

5)       கலைமகள் நாராயணசாமி ஐயர் நினைவு முதல் பரிசு

6)       அமுதசுரபி மற்றும் ஸ்ரீராம் நிறுவனம் நடத்திய போட்டியில் சிறந்த நாவலாசிரியர் பரிசு

7)       ஜூனியர் சேம்பர் 1990-ல் வழங்கிய சிறந்த பெண்மணி விருது

8)       ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வழங்கிய சிறந்த நாவலாசிரியர் விருது

9)       தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்ற விருது

10)   இலக்கியச்சிந்தனை விருது

11)   திருப்பூர் தமிழ்ச்சங்கம் விருது

12)   தமிழ்நாடு அரசு சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது -2020

இணைய இணைப்புகள்