Oct 12, 2021

எழுத்தாளர்.பழனி.சோ.முத்துமாணிக்கம்

 தொகுப்பு: முனைவர் பேரா.மீனாசுந்தர்

            நல்லுயிர் உடம்பு செந்தமிழ் மூன்றும் நான் நான் நான்என்று பாவேந்தன் பாடியதை உயிர்மூச்சாகக் கொண்டு , சமூக அவலங்களைச் சாடும் படைப்பாளியாக இயங்கிக் கொண்டிருப்பவர் பழனி. சோ.முத்துமாணிக்கம். “என் கண்முன் நடமாடும் மாந்தர்களே என் கதை கவிதைகளுக்குள் கதைமாந்தர்களாக உலாவுகிறார்கள்எனக் கூறும் சோ. முத்துமாணிக்கம், தஞ்சை நண்பர்களுக்கு மணிமுத்தாகவும் பழனி வட்டாரத்தில் தமிழ்ச்சுடர் மணிமுத்தாகவும், செம்பவளமாகவும் புனைமுகங்கள் காட்டி நிற்கிறார்.

            பழனி வட்டம் அமரர்பூண்டி என்னும் சிற்றூரில் சோமசுந்தரம் நாச்சம்மாள் இணையருக்கு, 01/07/1950 அன்று பிறந்தார். அவ்வூரில் உள்ள சரசுவதி தொடக்கப் பள்ளியில் எட்டாம் வகுப்புவரை பயின்றார். ஆயக்குடியில் உள்ள .டி..உயர்நிலைப் பள்ளியில் ஒன்பது முதல் பதினொன்றாம் வகுப்பு ( அந்நாள் S.S.L.C } வரை பயின்றார். பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்து புகுமுக வகுப்பையும் இளம் அறிவியல் ( வேதியியல் ) பட்டப் படிப்பையும் முடித்தார். மதுரை காமராசர் பல்கலையில் தமிழ் முதுகலை மற்றும் இளம் முனைவர் ( எம். & எம்.பில் ) பட்டங்களைப் பெற்றார்.  இவருடைய மனைவி சரளா அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் வணிகவியல் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.கோவையில் இருக்கும் இவர்களுடைய மூத்த மகள் மலர்விழி, வீட்டிலிருந்தே மென்பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.சென்னையில் வசிக்கும்  இரண்டாவது மகள் முனைவர் பூங்குழலிபுதிய தலைமுறை  தொலைக்காட்சியில் மூத்த செய்தியாளராகப் பணியாற்றுகிறார்.

            இளம்அறிவியல் பட்டம் பெற்றபின் அறிவியல் ஆய்வுப் படிப்புக் கனவுகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு ஓராண்டு மளிகைக் கடையில் வேலைபார்த்தார்.வேலையில்லாப் பட்டதாரிகளுக்குப் புகலிடம் கொடுக்கக் கலைஞர் அவர்கள் உருவாக்கியஇளைஞர் அணியில் ‘ ( youth service corps ) சேர்ந்து முதுகுளத்தூர் வட்டம் அலங்கானூரில் ஓராண்டு பணிபுரிந்தார். அதற்கடுத்து காட்பாடி கல்புதூரில் பள்ளித்துணை ஆய்வாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக ஓராண்டு வேலைசெய்தார். 1974-முதல் பாரத அரசு வங்கியில் பணிநிறைவடையும் வரை (2010) உழைத்தார்.

             தன் பதிமூன்றாம் அகவையிலேயே இவருக்குக் கதைகளைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் பொன்னியின் செல்வன் கல்கி. வளர்த்தெடுத்தவர் கடல்புறா சாண்டில்யன்.கல்லூரி நுழைவுக்குப்பின் மு.. , திரு.வி.. , செயகாந்தன் ஆகியோர் வழிநடத்தத் தொடங்கினர். கல்லூரியில் பாவலர் மன்றம் எனும் அமைப்பைத் தொடக்கி அதன்  செயலராக இயங்கியுள்ளார். கொடுக்கப்படும் ஈற்றடி அமையும் வண்ணம் வெண்பா எழுதுவோர் வாரம் ஒருமுறை கூடி அரங்கேற்றுவர்.

            தேவநேயப் பாவாணர்,பெருஞ்சித்திரனார்,தமிழ்க்குடிமகன் ஆகியோர் நட்பால் தனித்தமிழ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவராக மாறினார். ’ தமிழ்ச்சுடர்எனும் கையெழுத்து மாத  இதழைத் தன் இருபதாவது அகவையில் தொடங்கினார். பின்னர் அது அச்சிதழாக மலர்ந்து இரண்டாண்டுகள் சுடர்வீசியது. பூம்புனல், முதியோர் காவலன் ஆகிய சிற்றிதழ்களின் பொறுப்பாசிரியராக விளங்கினார். வள்ளலார், தாயுமானவர்,பாரதி, பாவேந்தன் ஆகியோரின் பாடல்களைப் படித்தபின் கவிதை எழுதும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. தமிழக அரசின் இதழாக வெளிவந்ததமிழரசுநடத்திய வெண்பாப் போட்டியில் தொடர்ந்து பங்கேற்றுள்ளார்.

            தெசிணி அவர்கள் நடத்திய கவிதை , துளிர் , மகளிர் சிந்தனை, செம்மலர் , வண்ணக்கதிர், கவிதை உறவு, கல் ஓசை, தென்மொழி , தமிழ்ச்சிட்டு, தமிழ்ச்சுடர், மகாகவி, முங்காரி, பூம்புனல், ஓடம், ஏணி, முதியோர் காவலன், பொதிகை மின்னல், குயில், வெல்லும் தூயதமிழ், பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிட்டி முதலிய இதழ்களில் இவருடைய கவிதைகளும் சிறுகதைகளும் வெளிவந்துள்ளன. கொலீக் ( colleague ) என்ற வங்கி மாத இதழில் இவருடைய ஆங்கிலக் கவிதை ஒன்று ( AIM  AND THEME ) வெளிவந்துள்ளது.

            பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நடந்த அனைத்துலகக் கருத்தரங்கங்கள், தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் கழகம்(FOSSILS) நடத்தும் கருத்தரங்கங்கள் ஆகியவற்றில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை அளித்துள்ளார்.பாரதியார் பல்கலை வெளியிட்ட சங்க இலக்கியக் கட்டுரைத் தொகுப்பு நூல்களில் இவருடைய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இலக்கியச் சொற்பொழிவுகள், கவியரங்கங்கள், பட்டிமன்றங்கள் எனப் பலவற்றிலும் பங்கேற்பவராகவும் நடுவராகவும் இயங்கி வருகிறார்.

            பழனி பாரத அரசுவங்கி ஊழியர் சங்கத்தின் செயலராகவும், பழனி அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவராகவும் (UNITED FORUM OF BANK UNIONS,PALANI) பொறுப்பு வகித்துள்ளார்.

            ஒரு பதிப்பாளராகஎரிமலைப் பூக்கள் ‘ , ‘ உலகம் என்பது என் வீடுமுதலிய நூல்களைத் தன்  பூமலர் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.

            மரபுக் கவிஞராக இருந்து புதுக்கவிதைக்கு வந்தவர் இவர். தோழர் இரா.சு.மணி அவர்களுடைய நட்பால் .மு.. வில் 1992-இல் இணைந்தார். .மு... பழனிக் கிளையின் செயலராகவும், திண்டுக்கல் மாவட்டக் குழு உறுப்பினராகவும், திண்டுக்கல் மாவட்ட இணைச் செயலராகவும் மாவட்டச் செயலராகவும் பணிபுரிந்துள்ளார். இந்நாள் மாவட்டத் துணைத் தலைவராகவும், மாநிலக் குழு உறுப்பினராகவும் செயலாற்றி வருகிறார்.

            இவருடையஆணிவேர்கள்சிறுகதைவெல்லும் தூயதமிழ்மாத இதழ் நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்றது. ‘ எதிர் நீச்சல்என்னும் சிறுகதை திண்டுக்கல் அகில இந்திய சனநாயக மாதர் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. ‘ ஓரால மரவிழுதாய்என்ற மரபுக் கவிதை, திருப்பரங்குன்றம் .மு.. நடத்திய மரபுக் கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது.

            என்று முடியும் இந்த வழக்கு ?’ என்று இவரால் படைக்கப்பட்ட நாடகம் கணக்கன்பட்டி பாரதி கலைக்குழுவினரால் பன்முறை மேடையேற்றப் பட்டது. ‘ வானவில்லைத் தேடிஎன்ற நாடகம் திண்டுக்கல் சக்தி கலைக் குழுவினரால் அரங்கேற்றப் பட்டது.

            கவிஞராக, சிறுகதை எழுத்தாளராக, கட்டுரையாளராக.நாட்டுப் புறவியல் ஆய்வாளராக,நாடக ஆசிரியராக,சிறார் இலக்கிய எழுத்தாளராக விளங்கும் இவருடைய பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

வெளிவந்துள்ள படைப்புகள்

            1.       ஆய்வுகள்..தீர்வுகள்  (கவிதைகள்.)

2.       இயக்கவியல்- தமிழ்ப் புதினங்களின் வழி  (ஆய்வுக்கட்டுரை)

3.       ஆணிவேர்கள்   (சிறுகதைத்  தொகைநூல்

4.       உயிரின் விலை (நாடகங்கள் )

5.       உலகம் என்பது என் வீடு ( கவிதை)

6.       தமிழ் இலக்கியப் பாடல்கள் தரும் இன்பம் ( கட்டுரைகள்)

7.       மதமா ? மனிதமா ?   ( கட்டுரை..சிறுநூல் வரிசை )

8.       நீலத் திமிங்கலம் முதல் பிக்பாஸ் வரை .(கட்டுரைகள்)

9.       மாணவன் ஆசிரியரான கதை  ( சிறுவர் கதைகள் )

பெற்ற  பரிசுகள் &  விருதுகள்

1.       திருப்பூர் தமிழ்ச் சங்க விருது.(29/02/2004) ’ஆணிவேர்கள்நூலுக்கு

2.       கே.ஆர்.ஜி.நகப்பன் என் இராஜம்மாள் அறக்கட்டளை, குகை,சேலம் அளித்த இலக்கியப் பரிசு.(29/08/2004) ‘உயிரின் விலைக்காக

3.       பயணம் பதிப்பகத்தின் சிறந்த கட்டுரை நூல் (2019)’நீலத் திமிங்கலம் முதல் பிக்பாஸ் வரை’-தோழர் வி..லெனின் நினைவுப் பரிசு.

4.       நீடாமங்கலம் இலக்கிய வளர்ச்சிக் கழகம் வழங்கியநற்றமிழ் நாவலர்விருது.

5.       பழனி தமிழ்ச் சங்கம் வழங்கியபாரதியார் விருது

படைப்புகளின்மேல் ஆய்வு

*‘ஆணிவேர்கள்’ –நூலை இளம் முனைவர் (எம்.பில்) பட்டத்துக்காக இருவரும், முதுகலைப் பட்டத்துக்காக ஒருவரும் ஆய்வுசெய்துள்ளனர்.

*’உயிரின் விலை’ – கோவை துடியலூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலைப் பட்டப் (பி..) படிப்புக்குப் பாடமாக வைக்கப்பட்டிருந்தது.இந்நூலை இளம் முனைவர்(எம்.பில்) பட்டத்துக்காக ஒருவர் ஆய்வு செய்துள்ளார்.

* ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில், தமிழ்ப் பாடத்திட்டத்தில் வெளியானகவிச் சோலையில்,குறும்பாக்கள் இடம்பெற்றுள்ளன.

இணைய இணைப்புகள்